ஜோலார்பேட்டை : ஞாயிறு விடுமுறையான நேற்று சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை வெறிச்சோடி காணப்பட்டது.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், ஏழைகளின் ஊட்டி எனவும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா, முருகன் கோயில், பூந்தோட்டம், மூலிகை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மேலும், 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட மலை சாலைகள், ஆங்காங்கே பார்வை மையங்கள் உள்ளதால் மலை உயரத்தில் இருந்து இயற்கை அழகை பார்க்கும்போது மனதை கவர்கிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களிலும், விழா நாட்களிலும் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஏலகிரி மலைக்கு வந்து கண்டுகளித்து செல்கின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கும், ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டது. இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை எண்ணிக்கை குறைந்தது. தற்போது, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்துள்ள நிலையிலும், விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகள் வருகையின்றி ஏலகிரி மலை வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள படகுத்துறை, சிறுவர் பூங்கா, இயற்கை பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்கள் வெறிச்சோடியது குறிப்பிடத்தக்கது.